சென்னை: தமிழகத்தில் 2022-ல் நிகழ்ந்த 91 சதவீத பெரிய அளவிலான காட்டுத் தீ நிகழ்வுகள் 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது இந்திய வன அளவீடுத் துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
வனத்தீ மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்துப் பட்டறை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் இன்று (பிப்.9) தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கருத்துப் பட்டறையை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வனங்கள் உருவான காலம் தொட்டு வனத்தீயும் இருந்து வருகிறது. வனத்தீ வனங்களுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. வனத்தீ வன வளங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதல்லாமல் வனங்களின் உயிர்பன்மை, சூழலியல் மற்றும் சுற்றுச்சுழல் ஆகியவற்றிலும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட 1500 தீ நிகழ்வுகளில் வனத்துறையின் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் 91 சதவீத பெரிய அளவிலான தீ நிகழ்வுகள் 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய வன அளவீடுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ள தமிழக வனத்துறை நவீனப்படுத்த 52.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வனத்தீ மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக 21.11 கோடி ரூபாய் அரசு விடுவித்துள்ளது. தமிழக அரசு சென்னையில் ஒரு கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது. இதேபோன்று 34 கோட்டங்களில் 6.80 கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
» “அரும்பின் அழகு டானியாவின் புன்னகையில்” - சிறுமியிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
» ‘புதுமைப் பெண்’ திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை 27% உயர்வு: முதல்வர் ஸ்டாலின்
இந்நிகழ்வின் போது கருத்துப் பட்டறையில் வனத்தீ மேலாண்மை தொடர்பான தொழில் நுட்பம் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்த கையேட்டினை தலைமைச் செயலாளர் வெளியிட்டார். இந்த கையேடு வனத்தில் தீ ஏற்படுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைமைச் செயலாளர் அவர்கள் வனத்துறை தீ நிகழ்வுகளை உடனடியாக கண்காணிக்க தேவையான செயலியை அறிமுகப்படுத்தினார்கள் மற்றும் மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தீ தடுப்பு பணிகளை இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.
மேலும் வனத்துறையை மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி மாவட்ட அளவில் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களை பெற அறிவுறுத்தினார்கள் அத்துடன் வனத்தீயை கட்டுப்படுத்த தீயினால் அதிக பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்திறன் மிக்க தீ மேலாண்மை பணிகளுக்காக ரூ.5.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீத்தடுப்பு பணிகளில் உயிரிழக்கும் வனத்துறை பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் அரசு உதவித்தொகை வழங்கும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.