கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக வனத்துக்குள் 120 யானைகள் ‘வலசை’ - குழுக்களாக பிரிந்து 7 வனச்சரகத்தில் முகாம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து நிகழாண்டில் 120-க்கும் மேற்பட்ட யானைகள் வலசை வந்துள்ளன. அவை குழுவாக பிரிந்து 7 வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளன.

கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 1.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியாக உள்ளது. இவ்வனப்பகுதியில் உள்ள 115 காப்புகாடுகளில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக வாழ்ந்து வரு கின்றன.

பன்னர்கட்டா: இந்நிலையில், கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் யானைகள் தமிழக வனப்பகுதிக்கு இடப்பெயர்ச்சி (வலசை) செய்வது வழக்கம். ஓசூர் வனக்கோட்டம் தளி அருகே தேவர்பெட்டா வனப்பகுதி வழியாக இடப்பெயர்ச்சியை தொடங்கும் கர்நாடகா யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, நொகனூர், ஊடேதுர்க்கம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வனச்சரகங் களுக்கு உட்பட்ட காப்புக் காடுகளில் அவை தஞ்சம் அடைகின்றன.

சித்தூரிலும் முகாம்: பின்னர் அவை மீண்டும் கர்நாடக மாநிலம் கோலார் வனப்பகுதி வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதிக்கு செல்கின்றன. நிகழாண்டில், கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் 120-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்கு இடப்பெயர்ச்சி செய்துள்ளன.

அவை பல குழுக்களாக பிரிந்து ராயக்கோட்டை வனச்சரம் ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர், அய்யூர், உரிகம் வனச்சரகம் உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி, ஜவளகிரி வனச்சரகம் தளி, ஜவளகிரி, உளிபெண்டா, அஞ்செட்டி வனச்சரகம் அஞ்செட்டி, உப்ராணி, நாட்றாப்பாளையம், பிலிகுண்டுலு, ஓசூர் வனச்சரகம் சானமாவு மற்றும் கிருஷ்ணகிரி வனச்சரகம் மகராஜகடை, வேப்பனப்பள்ளி ஆகிய காப்புக்காடுகளில் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் அவை காப்புக்காடுகளிலும், இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இடப்பெயர்ச்சியாகும் யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க யானைகளின் வலசை பாதைகளை காக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உணவுத் தேவைக்காக ‘வலசை’: யானை ஆய்வாளர் ஆற்றல்.பிரவீண்குமார் கூறியதாவது: யானைகளுக்கு உணவுத் தேவை அதிகம் என்பதால், அவை ஒரே இடத்தில் வாழ்வதில்லை. இதன் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அவை காலம், காலமாக இடப்பெயர்ச்சி செய்கின்றன.

இதற்கான பாதைதான் வலசைப் பாதை. இப்பாதையை பயன்படுத்தும் யானைகள், தங்கள் குட்டிகளுக்கும் போதிக்கின்றன.வலசை பாதைகள் அழிந்தும், ஆக்கிரமிக்கப்படுவதாலும் தான் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றன. விதை பரவுதல், காடுகள் மேலாண்மை, இயற்கை பாதுகாப்பு என அனைத்துக்கும் யானைகள் முக்கியம். எனவே, நாம் யானைகளையும், அதன் வழித் தடங்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மின்வேலி விழிப்புணர்வு: ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி கூறியதாவது:- காப்புக்காட்டில் இருந்து வெளியில் வரும் யானைகளை பாது காப்பாக வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது, உயிர்சேதம், பயிர்சேதங்களை தடுத்து வருகிறோம். இதேபோல, விவசாய நிலங்களைச் சுற்றி திருட்டுத்தனமாக மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும் என விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

7 days ago

சுற்றுச்சூழல்

9 days ago

சுற்றுச்சூழல்

17 days ago

சுற்றுச்சூழல்

20 days ago

சுற்றுச்சூழல்

21 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

26 days ago

சுற்றுச்சூழல்

28 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்