திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் நீலமேனி ஈப்பிடிப்பான் பறவை வலசை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவை நோக்கலில் திருப்பூர் இயற்கை கழகத்தை சேர்ந்த முருகவேல், கீதாமணி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள், நீலமேனி ஈப்பிடிப்பான் என்ற பறவையை புகைப்படம் பிடித்துள்ளனர்.

இந்தப் பறவை நஞ்சராயன் குளத்துக்கு வருவது இதுவே முதல்பதிவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘நீலமேனி ஈப்பிடிப்பான் பறவை, இமயமலை மற்றும் கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கக்கூடியது. குளிர்கால வலசையாக தென் பகுதிகளுக்கு வரும்.

அதிலும் அடர்ந்த காடுகளிலும், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் காடுகளின் ஓரங்களில் இப்பறவை காணப்படும். உள்ளூர் குளங்களுக்கு அரிதாகவே இப்பறவை வரும். இந்த பறவை, நஞ்சராயன் குளத்தில் தென்பட்டுள்ளது. குளிர்கால வலசையின்போது, வழியில் இளைப்பாறுவதற்காக இதுபோன்ற நீர்நிலைகளின் அருகில் இப்பறவை இறங்கிச்செல்லும். இந்த பறவையுடன் சேர்த்து நஞ்சராயன் குளத்தில் 186 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE