ராம்சர் தளமான வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகளின் வருகை குறைவு: உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

By கோ.கார்த்திக்

ராம்சர் தளமான வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் குறைந்தளவே தண்ணீர் உள்ளதால் சீசன் தொடங்கியும் பறவைகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ராம்சர் தளமாக உள்ள இந்த சரணாலயத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சீசன் தொடங்கி, ஜூலை மாதம் வரையில் பறவைகள் தங்கியிருக்கும்.

அப்போது, உள்ளூர் மட்டுமின்றி ஆஸ்திரேலியோ, கனடா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக, வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்டி தங்கும். மேலும், அருகில் உள்ள நீர்நிலைகளில் இரை தேடி உண்டு ஏரியின் உள்ளே அமைந்துள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறித்து மீண்டும் தாய்நாடு திரும்புவது வழக்கம். இதில், ஆண்டுதோறும் சராசரியாக 50 ஆயிரம் முதல்60 ஆயிரம் பறவைகள் வருவதாகவும் இனப்பெருக்கம் செய்து 3 மடங்காக திரும்பி செல்வதாகவும் வனத்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப் படுகிறது.

இந்நிலையில், வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் சரணாலய ஏரியில் சுமார் 9 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. மேலும், மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக கருதப்படும் மதுராந்தகம் ஏரியிலும், 3 ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சரணாலயத்துக்கு வரும் பறவைகள் இரை கிடைக்காமல் வேறு பகுதிக்கு செல்லும்நிலை ஏற்பட்டுள்ளதாக பறவைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்போது, சீசன் தொடங்கியுள்ள நிலையில் சரணாலயத்தில் 2 ஆயிரம் பறவைகள் மட்டுமே வந்துள்ளதாக வனத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பறவைகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி

இதுகுறித்து, சமூக ஆர்வலர் பழனி கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு ராம்சார் தளமான பறவைகள் சரணாலயம், ரூ.9.3 கோடி மதிப்பில் இயற்கை சூழலில் மெருகூட்டப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறைஅமைச்சர் மூலம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், பல்வேறு வகையில் சரணாலயம் மேம்படும் என அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். ஆனால், ஒருசில இடங்களில் பறவைகளின் ஓவியம் அடங்கிய பலகைகள் மட்டுமே வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. வேறு எந்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

மேலும், சரணாலயத்தின் உள்ளே சுற்றுலா பயணிகளுக்கான கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும்சிறுவர்களை கவரும் வகையில் சரணாலய நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பறவைகளின் சிலைகள், ஆங்காங்கே உடைந்து சிதிலமடைந்துள்ளன. அதேபோல், பறவைகளை அனைவரும் கண்டு ரசிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வாட்ச் டவரில் உள்ள இரும்பிலான கைப்பிடிகள் துருபிடித்துள்ளன. இதனால், சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதனால், சரணாலயத்தில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், சிறுவர்களை ஈர்க்கும் வகையில் பறவைகளின் சிலைகள், இருக்கைகள் போன்றவற்றை அதிகளவில் புதிதாகஅமைக்க வேண்டும். ஏரிக்கரையில் கூடுதலாக வாட்ச் டவர் அமைத்தல், ஏரியின் உள்ளே மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, வனத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: போதிய மழையில்லாததால் சரணாலய ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளது. எனினும், பருவமழை தொடங்கியுள்ளதால் ஏரிக்கு நீர்வரத்து ஏற்படும் என நம்புகிறோம். மேலும், தற்போதுதான் சீசன் தொடங்கியுள்ளதால் இனிவரும் நாட்களில் பறவைகளின் வருகை அதிகரிக்கக்கூடும். சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுச்சூழல்

1 day ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

5 days ago

சுற்றுச்சூழல்

6 days ago

சுற்றுச்சூழல்

12 days ago

சுற்றுச்சூழல்

14 days ago

சுற்றுச்சூழல்

16 days ago

சுற்றுச்சூழல்

24 days ago

சுற்றுச்சூழல்

27 days ago

சுற்றுச்சூழல்

28 days ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

சுற்றுச்சூழல்

1 month ago

மேலும்