ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் குறித்த கருத்தரங்கு   

By டி.ஜி.ரகுபதி 


கோவை: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் குறித்த கருத்தரங்கு, வரும் செப்டம்பர் 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈஷாவின், காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் குமார் ஆகியோர் கோவையில் இன்று (ஆக.28) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, 'சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே' என்ற தலைப்பினால் ஆன கருத்தரங்கு, வரும் செப்டம்பர் 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம், ஸ்ரீ லஷ்மி மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். ஆழியாறு அறிவுத் திருக்கோயிலின் அறங்காவலர் பச்சையப்பன், சிறப்பு விருந்தினர்களாக கேரள மாநில மின்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மருத்துவர் துரைசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மரவாசனைப் பயிர்களான ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி (பிரியாணி இலை), கிராம்பு, அவகோடா ஆகியவற்றை தகுந்த சூழலை உருவாக்கினால் சமவெளியிலிலும் தரமான முறையில் விளைவிக்க முடியும். மரவாசனை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை வெகுவாக அதிகரிக்க முடியும்.

இதுகுறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தவும், சாகுபடி நுணுக்கங்கள், அதன் பராமரிப்பு முறைகள் மற்றும் முன்னோடி வெற்றி விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.

இக்கருத்தரங்கை ஈஷாவுடன், இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மசாலா வாரியம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. இதில், மேற்கண்ட ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, மரவாசனைப் பயிர்கள் சாகுபடி குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

இக்ககருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90081, 94425 90079 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.'' இவ்வாறு அவர்கள் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE