சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதி: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீரில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில், மத்தியமாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து, சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை இல்லாத, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.

சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளையோ, சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளையோ பயன்படுத்தக் கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை பொதுமக்கள் அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE