மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீர் புகைமூட்டம் - ஊழியர்கள் அவதி

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீரென அதிகரித்த புகைமூட்டத்தால் ஊழியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமாக, மேட்டூரில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தமாக 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் படுகிறது. தற்போது, முதல் பிரிவில் 210 மெகா வாட் மின் உற்பத்தி கொண்ட 4 அலகிலும் மின் உற்பத்தி நடந்து வருகிறது. 600 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட 2-வது பிரிவில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு 45 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது.

இங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிலக்கரி ஆங்காங்கே குவியல் குவியலாக தேங்கி கிடக்கும் இன்று மதியம் அப்பகுதியில் திடீரென புகைமூட்டம் அதிகரித்தது. இதனால், அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனிடையே, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடும் புகைமூட்டம் மற்றும் துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர், அப்பகுதியில் இருக்கும் நிலக்கரி மீது தண்ணீர் அடிக்கப்பட்டு, புகைமூட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “அனல் மின் நிலையம் வளாகத்தில் டன் கணக்கில் நிலக்கிரி கொட்டி வைக்கப்படும். இதனை இயந்திரம் மூலமாக எடுத்து சென்று மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும். நிலக்கரி குவியலாக தேங்கி இருக்கும் போது, ஒரு சில நேரங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அந்த நேரத்தில் தீ பிடிப்பது போல் புகைமூட்டம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். பராமரிப்பு பணி காரணமாக, நிலக்கரி அதிகளவில் தேங்கி குவியலாக இருக்கிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, புகை மூட்டம் அதிகரித்துள்ளது. இதனை தண்ணீர் அடித்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE