சிறப்பாக பராமரிக்கப்படும் சென்னை - ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா - குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி!

By டி.செல்வகுமார் 


சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா முழுவதும் மிக தூய்மையாகப் பராமரிக்கப்படுவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழலை முன்னிறுத்தி குப்பை சேகரிப்பிலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மிகப் பழமையான பூங்கா திரு.வி.க.பூங்கா. சுமார் 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்கா மெட்ரோ ரயில் பணிகளுக்காக 2011-ல் மூடப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பிறகு, சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டது. சுரங்கப் பாதையில் உள்ள ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்குப் பகுதியில் அரசமரம், மாமரம், புங்கை, வேம்பு, பூவரசம், நெல்லி, தேக்கு உள்ளிட்ட மரவகைகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன.

மேலும், ஜப்பானிய தொழில்நுட்பமான மியாவாக்கி முறையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு செயற்கை காடுகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆழமான குழிகளை வெட்டி அதில் குப்பைகளைப் போட்டு நெருக்கமாக செடிகளை நட்டு வளர்க்கும் முறைதான் மியாவாக்கி. குப்பைகளைக் கொண்டே குட்டி வனத்தை உருவாக்குவது இம்முறையின் சிறப்பு.

இதனடிப்படையில், இப்பூங்காவில் குப்பை சேகரிப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக திடக்கழிவு மேலாண்மைக்காக மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து பெறப்படுகிறது. சென்னையில் உள்ள 835 பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து போடுவதற்கு வசதியாக 2 குப்பைத் தொட்டிகள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு, வீடாக குப்பைகள் சேகரிப்பவர்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் மட்டும் 3 பகுதிகள் கொண்ட குப்பைத் தொட்டி மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. தனியார் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இப்புதிய முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பூங்காவில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டி.
| படங்கள் - டி.செல்வகுமார் |

ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும் காகிதக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள் என 3 வகையான கழிவுகளை தனித்தனியாக போடும் வசதி உள்ளது. எந்த குப்பையை எதில் போடுவது என பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் பச்சை, நீலம், வெள்ளை என 3 வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம், நாம் ஒன்றிணைந்து சுத்தமான, பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள் குறிப்பிட்ட குப்பையை அதற்கான தொட்டியில் போடாமல் மாற்று தொட்டியில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

சென்னையில் உள்ள மற்ற பூங்காக்களில் குப்பைத் தொட்டிகள் அழுக்காகவும், நிரம்பி வழிந்தும், துர்நாற்றத்துடனும் காணப்படுகிறது. ஆனால் ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்காவில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் மட்டுமல்லாது அங்குள்ள கழிப்பறைகளும் தூய்மையாகவும், துர்நாற்றம் இல்லாமலும் பராமரிக்கப்படுவது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பூங்கா வளாகம் முழுவதும் செயற்கை காடுகள், புல்தரைகள், வண்ண வண்ண பூச்செடிகளுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் கூடைப்பந்து மைதானம், கைப்பந்து மைதானம், திறந்தவெளி அரங்கம், வெளிப்புற உடற்பயிற்சிக்கூடம், இசை நீருற்று, கிரிக்கெட் பயிற்சி பகுதி, சறுக்கு வளையம் (ஸ்கேட்டிங் ரிங்), வாசிப்பு மண்டலம், 8 வடிவ நடைபாதை, பூப்பந்து மைதானம், தியான மையம், யோகா மையம், விளையாட்டுத் திடல் என அனைத்தும் சர்வதேச தரத்தில் மிக தூய்மையாக பராமரிக்கப்படுவது எங்கும் காணாத காட்சி.

இதைப்போலவே சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் பராமரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்பது திரு.வி.க. பூங்காவுக்கு சென்று வந்த மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE