திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வன அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்,திருநெல்வேலி மாவட்ட வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் மதிவேந்தன் தலைமை வகித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைகளைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மாஞ்சோலை புலிகள் காப்பகமாக இருப்பதாலும், காப்புக்காடுகள் பட்டியலில் இருப்பதாலும், சூழல்சுற்றுலா அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.