“அணுமின் நிலைய வெப்பநீரால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பில்லை” - கூடங்குளம் வளாக இயக்குநர் உறுதி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: அணுமின் நிலைய வெப்பநீரால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பில்லை என, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஸ்ரீஜாய் பி.வர்கீஸ் தெரிவித்தார். திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. விழாவில் கூடங்குளம் அணுமின் நிலைய முதன்மை விஞ்ஞானியும், அணுமின் நிலைய வளாக இயக்குநருமான ஸ்ரீஜாய் பி.வர்கீஸ் பட்டங்களை வழங்கி பேசியதாவது: இந்தியாவில் 65 சதவீத மின்உற்பத்தி நிலக்கரி மூலம் நடைபெறுகிறது. அணு சக்தி மூலம் 2 சதவீத மின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வருகிறது. அனல்மின் நிலையம் மூலம் பெறப்படும் மின்சாரத்தால் அதிகளவு சாம்பல் வெளியேறுகிறது. நிலத்தடி நீர், கடல் போன்றவை மாசுபடும் பிரச்சினை உள்ளது.

நீர் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது, மிகப்பெரிய பரப்பளவு தேவைப்படுகிறது. பருவமழைக் காலங்களில் மட்டுமே நீர்மின் நிலையங்களால் மின் உற்பத்தி அதிகளவு செய்ய முடிகிறது. காற்றாலை மின் உற்பத்தி இயற்கை சார்ந்த மின் உற்பத்தியாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகரிக்கும் காலத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாற்று மின் உற்பத்தியில் அணுமின் உற்பத்தி முக்கிய இடம் வகித்து வருகிறது. எதிர்காலத்தில் மின்சார தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்வதில் அணுமின் நிலையங்கள் முக்கிய பங்காற்றும். அணுமின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது மிக குறைவான எரிபொருளே தேவைப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை வெளியேற்றுவதற்கும் மிகச் சிறப்பான தொழில்நுட்பங்கள் தற்போது கண்டறியப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அணு உலைக்கு உட்புறத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், வெளிப்புறத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அணு உலையில் வெப்பத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இயற்கை முறையில் அணு உலைகள் குளிரூட்டப்படுகின்றன. சுனாமி போன்ற எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிக்கப்படாத வகையில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கடலில் ஏற்படும் வெப்பத்துக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தான் காரணம் என தகவல்கள் பரவி வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவீடு அடிப்படையிலேயே அணுமின் நிலையத்தில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் வெப்ப நீரால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் புதிதாக எந்த கட்டுமானங்களும் கட்டப்படவில்லை. மீனவர்களை பாதுகாக்கும் வகையில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அணுசக்தி மின்சாரத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. மரபுசாரா எரிசக்தி துறையின் தேவை தற்போதைய நிலையில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE