முதுமலை; கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு, சூழல்சுற்றுலா 3 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன.பல இடங்களில் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டு வருகிறது. சாய்ந்த மரங்களை தீயணைப்பு, நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 6-வது நாளாக கனமழை தொடர்ந்ததால், உதகை,குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக அவலாஞ்சி சுற்றுலா மையம், தொட்டபெட்டா காட்சிமுனை மற்றும் பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையங்களை வனத்துறை மூடி உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம்துண்டிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் காரணத்தால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தெப்பக்காட்டில் இயங்கிவரும் முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா வரும் 22-ம் தேதி வரை மூடப்படுவதாக முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.
» சென்னை மெட்ரோ தானியங்கி கட்டண வசூலில் கோளாறு - பயணிகள் அவதி
» “அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்போரை ரவுடி என்பதா?” - பா.ரஞ்சித் ஆவேசம்
இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா கூறும்போது, “சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க முடியவில்லை. எனவே, புலிகள் காப்பகம் 3 நாள் மூடப்படுகிறது.
வாகன சவாரியும் நிறுத்தப்படுகிறது. சுற்றுச் சூழல் வளர்ச்சிக் குழு மூலம் இயக்கப்பட்டுவந்த உணவகங்கள் மூடப்படும். விரைவில் மின் இணைப்பை சீரமைப்பதாக மின் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மின்சாரம் வந்தவுடன் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும்” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 104 மி.மீ. மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல, அப்பர் பவானியில் 77, நடுவட்டத்தில் 60, சேரங்கோட்டில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.