மேட்டூர்: எடப்பாடி அருகே வனத்தை ஒட்டிய கிராமத்துக்கு சிறுத்தை வந்து சென்றது கண்காணிப்புக் கேமராவில் உறுதியான நிலையில், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எடப்பாடி அருகே பக்கநாடு, செம்மலைகரடு, ஆணைபள்ளம் உள்ளிட்ட பகுதிகள் மேட்டூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ளன. இப்பகுதியில் விவசாயத்தில் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வனத்தை ஒட்டிய பகுதியில் பண்ணை அமைத்து கால்நடைகள் வளர்த்தும், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கோம்பைக்காடு என்ற இடத்தில் பசு மாடு ஒன்று மர்ம விலங்கு கடித்து உயிரிழந்தது. இதனை சிறுத்தை தான் தாக்கிக் கொன்றது என மக்கள் தெரிவித்தனர். எனவே, மர்ம விலங்கினை கண்டறிய, அதன் நடமாட்டம் இருந்த பகுதியில் கால் தடம், விலங்கின் எச்சம் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனிடையே, வனத்தை ஒட்டிய பகுதிகளில் வனத்துறையினர் 13 இடங்களில் டிராப் கேமரா பொருத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
» கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: சிபிஐ விசாரணை கோரும் வழக்குகளை தள்ளிவைத்தது ஐகோர்ட்
» ஜூலை இறுதியில் புதுச்சேரி பட்ஜெட்: அதிருப்தி பாஜக எம்எல்ஏ-க்கள் ஆலோசனை
மேலும், மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்டறிய, உயிரிழந்த பசு மாட்டை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தாமல் வைத்திருந்தனர். இதனிடையே, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வனத் துறையினர் இன்று ஆய்வு செய்தபோது, அதில் சிறுத்தை வந்து செல்வது பதிவாகியிருந்தது. அந்த பதிவில், பசு மாட்டின் ஒரு கால் மற்றும் மீதமுள்ள பகுதியை சிறுத்தை தின்று சென்றதும் தெரியவந்தது.
இதையடுதது, மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவி உத்தரவின் பேரில், உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் மேற்பார்வையில், வனச்சரகர் தலைமையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டுகளை வைத்து அதனை உயிருடன் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது, கோம்பைக்காடு பகுதியில் முதற்கட்டமாக ஒரு கூண்டு வைத்து, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்த வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''பக்கநாடு அருகே வனத்தை ஒட்டியுள்ள இடத்தில் பசு மாட்டினை சிறுத்தை மீண்டும் வந்து தின்று சென்றது. இதனை பிடிக்க கூண்டில் இறைச்சி, ஆடு ஆகியவற்றை வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளோம். வனப் பகுதியில் இருந்து சுமார் 10 மீட்டர் அளவுக்கு தான் சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தி, எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி வருகிறோம். குழந்தைகள் வெளியே செல்லக்கூடாது. கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம். மாலை நேரத்துக்குப் பின்னர் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனச்சரகர் தலைமையில் 3 குழுக்கள் அமைத்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.