சேலம் உயிரியல் பூங்காவில் கடமான் தாக்கி வனத்துறை ஊழியர் உயிரிழப்பு

By எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் கடமான் தாக்கியதில் வனத்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலத்தில் ஏற்காடு அடிவாரத்தில் குரும்பபட்டி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு கடமான், புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகளும் அரியவகை பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்ட பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஏற்காடு அடிவாரத்தில் உள்ளதால் இந்த பூங்காவுக்கு சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் கடமான்கள் பராமரிக்கப்படும் வளாகத்துக்கு வியாழக்கிழமை காலை சென்ற வனத்துறை ஊழியர்கள் தமிழ்ச்செல்வன் (23), முருகேசன் (40) ஆகியோர் கடமான்களுக்கு தீவனம் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடமான்களில் ஒன்று, ஆக்ரோஷமாக முன்னேறி வந்து இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் கடமான்கள்

இதனை அறிந்த பிற வனத்துறை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், வனத்துறை ஊழியர் தமிழ்ச்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியரான முருகேசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளும், சேலம் கன்னங்குறிச்சி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE