கோவை: கோவையில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக, பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வீடுகளில் அனல் காற்று வீசியது. புழுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கோவையில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை நீடித்தது.
காந்திபுரம் 100 அடி சாலை, மசக்காளிபாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, ஒண்டிப்புதூர், ஆவாரம்பாளையம், கணபதி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.