கொடைக்கானல்: கொடைக்கானல் மலைக் கிராமங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் இரவில் கடும் குளிர் வாட்டினாலும், பகலில் சமதளப் பகுதியை போல் வெயிலின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் குளுமையை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், இங்கு நிலவும் வெயிலால் வேதனை அடைகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் கொடைக்கானலில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நேற்றும் மாலையில் கொடைக்கானல் நகர் மற்றும் மன்னவனூர், பூம்பாறை, கிளாவரை உள்ளிட்ட மேல்மலைக் கிராமங்களில் மழை பெய்தது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக் கண்டு ரசித்த சிறுவர், சிறுமியர் ஐஸ் கட்டிகளை சேகரித்து விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ந்தனர். இரவில் கடும் குளிர் நிலவியது.