ஆர்க்டிக் பகுதியில் இருந்து மதுரை நீர் நிலைகளுக்கு வலசை வரும் பறவைகள்!

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: ஆர்க்டிக் உள்ளிட்ட துருவப் பகுதி களிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் மதுரை மாவட்ட நீர்நிலைகளுக்கு வலசை வந்துள்ளதாக பிரதான்-இன்டஸ்இன்ட் நிறுவனம் சார்பில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லியை தலைமை யிடமாகக் கொண்ட பிரதான் நிறுவனம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், குளங்களை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இன்டஸ் இண்ட் – பிரதான் மாவட்ட வளர்ச்சித் திட்டம் மூலம் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஏரிகள், ஊருணிகள், கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தற்போது தண் ணீர் தேங்கியுள்ளது.

இந்த நீர்நிலைகளுக்கு வெளி நாட்டு பறவைகள் வலசை வந்துள் ளன. இங்குள்ள பறவைகள் கணக்கெடுப்பு குறித்து பிரதான் நிறுவனம், மும்பையை சேர்ந்த இயற்கை வரலாற்று சங்க ஆய்வாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். பறவையியல் அறிஞர்முனைவர் பாலச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர்கள் ரோஸ் பிரான்சிஸ், பால் ஆண்டனி, முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கணக்கெடுப்பு நடத்தினர்.

இதுகுறித்து டாக்டர் பாலச் சந்திரன் கூறியதாவது: இந்த ஆய்வில் 42 விதமான பறவைக் குடும்பங்களைச் சேர்ந்த 105 வகையான பறவைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த பறவைகள், அயல் நாட்டு பறவைகள், அழிந்த பறவைகள் எனக் கருதிய பலவித பறவைகள் தற்போது வலசை வந்துள்ளன.

ஆர்க்டிக் உள்ளிட்ட துருவப் பகுதிகளில் இருந்து வரும் வயல் உள்ளான், பச்சைக்கால் உள்ளான், வாலாட்டி உள்ளான், கொசு உள்ளான் உள்ளிட்ட பறவைகள் வந்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் வாத்து இனங்களான ஊசி வால் சிறகி, தட்டை இறகு வாத்து, பனக்கொட்டைச் சிறகி, சந்தனத்தலை வாத்து, சீனா, மங்கோலியாவில் இருந்து வந்துள்ள வரித்தலை வாத்து 27 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக் கூடியதாகும் என்று கூறினார்.

இதுகுறித்து பிரதான் நிறுவனத் தின் கண்மாய்கள் மேம்பாட்டுத் திட்டத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது: மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்களை சீரமைத்தோம். அங்கு வலசை வந்த பறவைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்க உகந்த கண்மாய்கள் குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE