கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத் தீயால் கருகிய அரியவகை தாவரங்கள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான அரியவகை தாவரங்களும், மரங்களும், கருகின.

கொடைக்கானல் மலைப் பகுதியில் பகலில் வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடி கொடிகள் இயற்கையாகவும், பட்டா நிலங்களில் வைக்கப்படும் தீயினாலும் மற்றும் சமூக விரோதக் கும்பல்களாலும் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. இதில் அரிய வகை மரங்களும், மூலிகைகளும், தாவரங்களும் கருகி வருகின்றன. இதனால் விலங்குகள் வனப் பகுதியை விட்டு குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலில் பட்டா மற்றும் வருவாய் நிலங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயானது வனப்பகுதிக்கும் பரவியது. இதில் நூற்றுக்கணக்கான மரங்களும், தாவரங்களும் கருகின. வனத்துறையினர் 2 நாட்களாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கொடைக்கானலுக்கு வத்தலகுண்டு மற்றும் பழநி வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்களால் தூக்கி வீசப்படும் பீடி, சிகரெட் துண்டுகளாலும் காட்டுத் தீ ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

24 மணி நேரமும் கண்காணிப்பு கோபுரம் மூலம் வனப் பகுதியில் தீப்பிடிப்பதை கண்காணித்து உடனடியாக அணைப்பதற்கும், தீ அணைப்பான் கருவி, தீத்தடுப்பு கோடுகள் மூலம் காட்டுத் தீயை கட்டுப் படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE