குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஃபாரஸ்ட் டேல் வனப் பகுதியில் கடந்த 6-வது நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது. தீயின் வேகம் அதிகரித்து வருவதால், கிட்டத்தட்ட 30 ஏக்கர் பரப்புக்கு மேல் மரங்கள் மற்றும் செடி, கொடிகள் தீயில் கருகியுள்ளன.
தமிழக வனம் மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் குன்னூர், கோத்தகிரி, உதகை, கூடலூர் பகுதிகளில் இருந்து பணியாளர்கள் சுமார் 200 பேர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தீத்தடுப்பு கோடுகள் அமைத்தனர். இருப்பினும் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் சூலூர் விமானப் படையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் ஊற்றி அணைக்க உதவி கோரப்பட்டது.
அதன்படி, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, 2 நாட்களாக ரேலியா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், வனப் பகுதியில் வன ஊழியர்களும் தீ அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.