தனுஷ்கோடி கடலோரத்தில் 3 மாதங்களில் 16,780 ஆமை முட்டைகள் சேகரிப்பு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 3 மாதங்களில் 16,780 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்துள்ளனர். அதேபோல, 2,238 ஆமை குஞ்சுகள் மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான், அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த முட்டைகள், நாய் மற்றும் பறவைகளால் சேதமடைவதை தடுக்கும் விதமாக அவற்றை சேகரித்து வனத்துறையினர் மீனவர்களின் உதவியுடன் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொறிப் பகங்களில் அடை காத்து பாதுகாத்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் தனுஷ் கோடி கடற்பகுதியிலிருந்து 153 குழிகளிலிருந்து 16,780 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதில் 18 குழிகளிலிருந்து வந்த 2,158 ஆமை குஞ்சுகள் மன்னார் வளைகுடா கடலில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று தனுஷ் கோடி முகுந்தராயர் சத்திரத்தில் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 19-வது குழியிலிருந்து வெளிவந்த 80 ஆமை குஞ்சுகளை, ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் மேற்பார்வையில், மண்டபம் வனச்சரகர் மகேந்திரன், வனவர், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE