ஒகேனக்கல்லுக்கு 20 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து உயர்ந்து சரிந்தது

By செய்திப்பிரிவு

தருமபுரி / மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி யாற்றில் 20 நாட்களுக்கு பின்னர் நீர்வரத்து 4,000 கன அடியாக உயர்ந்து மாலையில் சரிந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 22-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 300 கனஅடியாக பதிவானது. 23-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாகக் குறைந்தது. அன்று முதல்12-ம் தேதி வரையிலான 20 நாட்களிலும் தொடர்ந்து விநாடிக்கு 200 கனஅடியாகவே நீர்வரத்து நீடித்து வந்தது.

4 ஆயிரம் கன அடி: நேற்று காலை 6 மணி அளவீட்டின்போதும் விநாடிக்கு 200 கனஅடி என்ற அளவிலேயே நீர்வரத்து நீடித்தது. இந்நிலையில், நேற்று காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடி என்ற நிலைக்குநீர்வரத்து உயர்ந்தது. சுமார் 2 மணி நேரம் இதே அளவுடன் நீடித்த நீர்வரத்து பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

பெங்களூரு நகரில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை நிலவும் சூழலில் அதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக கர்நாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவ்வாறு திறக்கப்பட்டதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்துள்ளது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை நீர் இருப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தாலும், காவிரி ஆறு வழிநெடுகிலும், ஓடைகள், குட்டைகள் நிரம்புவது, வெயிலின் தாக் கத்தால் வறண்ட மணல் பரப்பில் தண்ணீர் உறிஞ்சப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 1,000 கனஅடிக்கு கீழேஇருக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 67 கனஅடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 62.36 அடியாகவும், நீர் இருப்பு 26.47 டிஎம்சியாகவும் இருந் தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE