சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள், அதை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், தியாகராய நகர் ஆர்.கே.எம்.சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
முகாமில், போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப்கள், காகிதம், போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன், அடர் புகையால் நுரையீரல்பாதிப்பு, கண் எரிச்சல் போன்றஉடல்நல பாதிப்புகளும் ஏற்படுகிறது என்றும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம்ஏற்படுகிறது என்றும் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், சுற்றுச்சுழல் துறை தகவல் அலுவலர் டி.இந்திரா தேவி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.