வால்பாறை: வால்பாறையில் எஸ்டேட் சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். வால்பாறையில் 50-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை, காபி பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத நிலையில் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வால்பாறையில் இருந்து காஞ்சமலை வழியாக வெள்ளமலை செல்லும் 13 கிலோ மீட்டர் தொலைவு சாலை, கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘வால்பாறையில் இருந்து காஞ்சமலை வழியாக வெள்ளமலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் முதல் கனர வாகனங்கள் வரை செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, எஸ்டேட் தொழிலாளர்கள் நலன் கருதி, வெள்ளமலை எஸ்டேட் சாலையை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும்’’ என்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘வெள்ளமலை சாலையை ரூ.13 கோடியில் சீரமைக்க, மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். சாலை அமைப்பதற்கான அனுமதி பெற்ற, இரண்டு வாரங்களில் நகராட்சி சார்பில் சீரமைக்கப்படும்’’ என்றனர்.