கால்கள் வெட்டப்பட்டு சிறுத்தை உயிரிழந்த சம்பவம்: கோத்தகிரியில் மூன்று தனிப்படைகள் விசாரணை

By செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோத்தகிரியில் கால்கள் வெட்டப்பட்டு சுருக்கில் உயிரிழந்த சிறுத்தை குறித்து, 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நீலகிரி வனக்கோட்டம் கோத்தகிரி வனச்சரகம் குஞ்சப்பனை பீட், மேல் தட்டப்பள்ளத்திலுள்ள தனியார் எஸ்டேட்டில் சிறுத்தை இறந்து கிடந்தது தொடர்பாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வனக் கோட்டத்தில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம், கோத்தகிரி வனச்சரகர் மற்றும் வனப் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைப்படி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் குமார், ஈளாடா உதவி கால்நடை மருத்துவர் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்து மாதிரிகளை சேகரித்தனர்.

மேலும், மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி வனச்சரகர்கள் தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே குடியிருப்புகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை வலுப்படுத்துவதற்காக, ஈரோடு, கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது குற்றம் செய்தவர்களை பிடிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE