பாம்பனில் உள்வாங்கிய கடல் - மீனவர்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: பாம்பன் கடற்கரையிலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு கடல் நீர் உள்வாங்கியதால், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுமோ என மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, டிச.16 முதல் 18-ம் தேதி வரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய் யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீன் பிடி படகுகளை கரையோரம் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் நேற்று காலையிலிருந்தே பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

மேலும், பாம்பன் பகுதியில் கடல் நீரானது 300 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் கடற்புற்கள், பாசி படிந்த பவளப்பாறைகள் அனைத்தும் வெளியே தெரிந்தன. கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் அனைத்தும் தரைதட்டி நிற்கின்றன. கடல் உள்வாங்கியதால், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படுமோ என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE