குன்னூர்: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்தது. இதனால், குன்னூர் பள்ளத்தாக்கு பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
உணவு, தண்ணீர் அதிகளவு இருப்பதால், யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்துள்ளன. இந்நிலையில், சமவெளிப் பகுதியில் இருந்து தற்போது 10-க்கும் மேற்பட்ட யானைகள் குன்னூர் பகுதிக்கு வந்துள்ளன. குன்னூர் - மேட்டுப் பாளையம் மலைப் பாதை சாலையோரத்தில் சுற்றித்திரிகின்றன.
பிறந்து சில நாட்களேயான குட்டியானையும் உள்ளதால், இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மலைப் பாதையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்க வேண்டாம் என்றும், யானை கூட்டத்தை புகைப் படங்கள் எடுக்கக் கூடாது என்றும் பொது மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.