கோவை தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை தடாகம் அருகே கருஞ் சிறுத்தை நடமாட்டம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் கருஞ்சிறுத்தை திரிவது தெரிய வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன் ஊருக்குள் புகுந்த கருஞ் சிறுத்தை அப்பகுதியில்உள்ள நாய், கோழிகளை கொன்ற நிலையில், நேற்று முன்தினம் ஆட்டை கடித்து கொன்றுள்ளது. இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கருஞ்சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக அப்பகுதி மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீட்டை சேதப்படுத்திய யானைகள் : கோவை, தடாகம் அருகே திப்பனூரில் நேற்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மூன்று யானைகள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தின. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE