கிருஷ்ணகிரி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் விதை பந்துகள் தயாரிப்பு என காவேரிப் பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களும், பிளஸ் 2 வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களும் இணைந்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சப்பை வழங்குதல், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கு அதிகமான விதைப் பந்துகள் தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கி வருகின்றனர்.
30 லட்சம் விதைப் பந்துகள்: இது தொடர்பாக காவேரிப் பட்டணம் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் கூறியதாவது; தேசிய பசுமைப்படை மாணவா்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து விதைப்பந்துகள் தயாரித்து வழங்கி வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளில், சுமார் 30 லட்சம் விதைப்பந்துகளை அரசுப் பள்ளி மாணவர்கள் மூலம் தயாரித்து, தனியார் தொண்டு நிறுவனங்கள், வனத்துறையினரிடம் வழங்கியுள்ளோம்.
இவை காடு, மலை, குன்றுகள் என பல்வேறு இடங்களில் வீசப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பந்துகளில் உள்ள மண் கரைந்து விதைகள் எளிதாக வளரத் தொடங்கும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன், மரங்கள் வளர்ந்து மழை கிடைக்கும். நிகழாண்டிலும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
» உலக மண் தினம்: காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு
» நாட்டு வெடியை கடித்த காட்டு யானை பலி: மற்றொரு யானை ரத்த சோகையால் உயிரிழப்பு @ கோவை
பிளாஸ்டிக் ஒழிப்பு: இதே போல், பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும், மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி, சென்னை என தாங்கள் பயிற்சி க்காக செல்லும் ஊர்களில் மக்கள் நிறைந்த இடங்களில் தேசிய பசுமைப்படை மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை் குறித்தும், மஞ்சப்பைகளை இலவசமாக வழங்குவதை முக்கிய பணியாக கொண்டுள்ளனர்.
10 லட்சத்திற்கான நிதி: கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 26 ஆயிரத்து 675 பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரங்களும், 5,350 மஞ்சப் பைகளும் வழங்கிய தேசியபசுமைப்படை மாணவர்களின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை பாராட்டி தமிழக அரசு விருதும், ரூ.10 லட்சத்திற்கான நிதியையும் வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.