‘டேஞ்சர்’ டிசம்பர்கள்... மிக்ஜாம் புயலால் தீவிர மழை பாதிப்பு ஏன்? - வல்லுநர்களின் பார்வை

By பாரதி ஆனந்த்

மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டிப், புரட்டிப் போட்டுள்ளது. இந்தப் புயலால் வட தமிழகம் மட்டுமல்ல, தெற்கு ஆந்திராவும் பெரிய அளவில் சேதங்களை சந்தித்துள்ளது. மிக்ஜாம் தீவிரப் புயலாகி உருவானதாலேயே பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இதுபோல் சமீப காலங்களில் பெரும்பாலான புயல்கள் தீவிரப் புயலாக உருவானதன் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

க்ளைமேட் ட்ரெண்ட்ஸ் (Climate Trends) என்ற சூழலியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இதுதொடர்பாக பல முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியக் கடல்களில் இந்தாண்டு ஏற்பட்ட புயல்களில் மிக்ஜாம் 6-வது புயல். பொதுவாகவே பருவமழைக் காலத்துக்குப் பிந்தைய புயல்கள் டிசம்பரில்தான் உச்சம் பெறுகின்றன. தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கிய புயல்கள் எல்லாம் டிசம்பரில்தான் உருவாகின்றன. அந்த வகையில் மிக்ஜாம் புயல் வங்கக் கடலில் டிசம்பரில் உருவானதை இயல்பாகக் கருதினாலும்கூட மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் அளவை சாதாரணமாகக் கருத இயலாது. புயலால் அதிதீவிர மழை பெய்யக் காரணம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

காலநிலை மாற்றமும் புயல் தாக்கங்களின் தீவிரமும், அதிர்வலைகளும்: புவி வெப்பமயமாதலால் புயல் உருவாதல் அதிகரித்துள்ளதோடு அவற்றின் வீச்சும் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவி வெப்பமயமாதலின் விளைவாக 93 சதவீத வெப்பத்தை கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால் கடலின் மேல்பரப்பு சூடாகி புயல் உருவாக ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது. அதேவேளையில் புயல் உருவாவதை முழுக்க முழுக்க கடல் நீரின் வெப்பம் மட்டுமே ஊக்குவிப்பதில்லை. கூடவே கடல் நீரின் அளவும் ஊக்குவிக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவி வெப்பமயமாதலால் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வதை நாம் அறிந்திருக்கிறோம். கடல் மட்டம் உயர உயர புயல்கள் அடிக்கடி உருவாவதும், அவை தீவிரமாவதும் அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், புவி வெப்பமயமாதலால் கடல் மேல்பரப்பின் வெப்பம் உயர்வதால் புயலின் உட்கரு பகுதிக்கு நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒரு நாள் சராசரி மழையளவு 6.5 செ.மீ என்ற அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்து உச்சபட்ச அளவை எட்டக்கூடும். புயலின் மையப் புள்ளியில் இருந்து 300 கிமீ தொலைவு வரை இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்கிறது எனக் கூறுகின்றனர். இதேபோல் கடல் வெப்பத்தால் காற்றின் தொடுகோட்டு வேகம் அதிகரிப்பது வெப்பமண்டல புயல்களின் நிகழ்வை, அவற்றின் வீரியத்தை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் அளவிடுகின்றனர். இதுதான் இந்தப் புயல்கள் வட கிழக்கு திசை நோக்கி வீரியத்துடன் நகர்வதையும் ஊக்குவிக்கிறது எனக் கூறுகின்றனர்.

இத்தகையக் காரணங்களால்தான் டிசம்பர் 3-4 தேதிகளில் சென்னையில் இடைவிடாமல் மழை பெய்துள்ளது. மிக்ஜாம் புயலால் அடர்த்தியான மேகப் பட்டைகள் ஒரே இடத்தில் குவிந்து வலுப்பெற்றதும் இதனால்தான். அப்படியான அடர்த்தியான மேகப்பட்டைகள்தான் சென்னையில் இடைவிடாத மழையை ஏற்படுத்தியுள்ளது என விவரிக்கின்றனர்.

தீவிரப்படுத்திய எல் நினோ: 2023-ல் எல் நினோ தாக்கம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதன் தாக்கம் தீவிரமாகி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.எல் நினோ தாக்கத்தால், பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேல்பரப்பு வெப்பமானது சராசரிக்கும் அதிகமாகவே இருக்கிறது. எல் நினோ தாக்கத்தை அளவிடும் Nino 3.4 என்ற (ஓசானிக் நினோ இண்டக்ஸ்) சமுத்திர நினோ தாக்க குறியீட்டில் வெப்ப அளவு பிப்ரவரி 2016-க்குப் பின்னர் முதன்முறையாக 2 டிகிரி செல்சியஸைக் கடந்துள்ளது. இப்படியாக, 2015-ல் ஏற்பட்ட சூப்பர் எல் நினோ தாக்கத்தின் விளைவாகவே டிச.2, 2015ல் சென்னையில் 29.2 செ.மீ மழை பதிவானது.

எல் நினோ என்பது எப்போதும் டிசம்பர் கிறிஸ்துமஸ் காலத்தில்தான் உச்சம் பெறுகிறது. அதனால்தான் ஸ்பானிய மொழியில் எல் நினோ (சிறிய பையன்) என்று இந்த காலநிலை நிகழ்வுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் 93 சதவீத வெப்பத்தை கடல்கள் ஈர்த்துக் கொள்வதால் எல் நினோவின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது. அதனால் பெயருக்கு ஏற்றார் போல் எல் நினோ இனியும் ‘சிறிய பையன்; அல்ல அது மிகப் பெரிய அசுரன் என்பதே காலநிலை ஆர்வலர்களின் பார்வையாக உள்ளது.

எல் நினோ தாக்கத்தால் கடல் மேல்பரப்பு வெப்பமடைவது இந்தியப் பெருங்கடலில் மிகவும் வேகமாக நிகழ்கிறது என்று காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் புயல்களின் எண்ணிக்கையும், தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை உற்று கவனிக்க வேண்டும் என்று இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ராப்பிகல் மீட்டராலஜி (IITM) அமைப்பின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் தெரிவித்துள்ளார்,

புவி வெப்பமயமாதலும் இந்தியாவை தாக்கும் புயல்களும்: இந்தியப் பெருங்கடலின் வடக்கே உருவாகும் புயல்கள் வேகமாக தீவிரமடைவதாக அண்மை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதாவது 24 மணி நேரத்தில் 54 நாட்ஸ் (knots) என்றளவுக்கு அந்தப் புயல்கள் தீவிரமடைகின்றன. 2000-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே இந்தியப் பெருங்கடலின் வடக்கே இவ்வாறாக புயல்கள் குறுகிய காலத்தில் தீவிரமடையும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது, இந்தியப் பெருங்கடலின் வடக்கே உருவாகும் புயல்கள் வேகமாக தீவிரமடைதல் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பசிபிக் பெருங்கடலின் வடமேற்கில் உருவாகும் புயல்கள் தீவிரமடைதல் 22 சதவீதமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், சமீப காலமாக வங்கக் கடலில் புயல்கள் நீண்ட நேரம் கடல் பரப்பின் மேல் உலாவுகின்றன. இதனால் கடல் நீரில் இருந்து கூடுதல் சக்தி பெற்று அவை அதிதீவிர புயலாகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் புயல்களின் போக்கை, தீவிரத்தை கணிப்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவி வெப்பமயமாதல் வேகமாக அதிகரிப்பதால் கடல் வெப்பமயமாதலையும் சேர்த்தே அளவிட்டால்தான் இனி வருங்காலங்களில் புயல்களின் போக்கு, தாக்கம் பற்றி துல்லியமாக கணிக்க முடியும். அது மட்டுமே புயலை எதிர்கொள்ள ஒரு சமூகத்துக்கு பேருதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

புயல்களால் கிழக்கு கடற்கரையில் ஏற்படும் சேதமும், இழப்பும்: வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஏற்படும் வெப்பமண்டலப் புயல்களில் குறைந்தது 5-ல் 6 என்ற எண்ணிக்கையில் இடம்பெறுகின்றன. இது ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றாலும் கூட வங்கக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பமண்டலப் புயல்களால் ஏற்படும் உயிரிழப்புகள், சேதங்கள் மற்ற வெப்ப மண்டலப் புயல்களைவிட அதிகமாக உள்ளன. அதிதீவிரப் புயல்கள் தரைக் காற்றை வலுவாக்குகிறது, மழையளவை அதிகரிக்கிறது, புயல் எழுச்சிக்கு வழிவகுக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது, மக்களின் சொத்துகள் சேதமடைகின்றன, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பெரியளவிலான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

அரபிக் கடலைவிட வங்கக் கடலில் அதிகப் புயல்கள் உருவாக நிலப்பரப்பு, வானிலை நிலைமை சாதகமாக இருக்கின்றன. 2019-ல் ஃபானி புயல் ஒடிசாவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது. 5000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 2013ல் ஃபாலின் புயலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அம்பான் புயல் மேற்கு வங்கத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத்தின்படி ஆந்திராவில் மட்டும் 1891 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 184 புயல்கள் வங்கக்கடலில் உருவாகியுள்ளன. சில காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடந்துள்ளன. ஆண்டுக்கு ஒரு புயல் மிகவும் ஆபத்தானது என்ற விகிதத்தில் புயல்கள் தாக்குகின்றன. மாநில அரசின் புள்ளிவிவரத்தின்படி அங்கே கடலோரப் பகுதிகளில் 33 லட்சம் பேர் வசிக்கின்றனர். 1975 தொடங்கி ஆந்திரா 60 புயல்களை சந்தித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் அங்கே ஓராண்டு கூட புயல், கனமழை என ஏதேனும் பாதிப்பு ஏற்படாத ஆண்டாக இருந்ததில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மிக்ஜாம் புயல் ஆந்திராவில் நேற்று 40 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு ஆளாக்கிச் சென்றுள்ளது.

தமிழகத்திலும் புயல்களுக்குப் பஞ்சமில்லை என்றளவும் கடந்த கால தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2011 தானே, 2012 நீலம், 2013 - மடி, 2016 - வர்தா, 2018 - ஒக்கி, 2019 - ஃபானி, 2020 - நிவர் என பல புயல்கள் புரட்டிப்போட்டு உயிர்ச் சேதங்களையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன.

வெப்பமான கடல், உயரும் கடல் நீரின் அளவும் வலுவான புயல்களை உருவாக்குகின்றன என்ற புரிதலோடு, இனி புயல் கணிப்பின்போது இதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே காலநிலை ஆராய்ச்சியாளர்களின் அறிவுறுத்தலாக இருக்கின்றது. அப்போதுதான் நாம் புயல்களில் இருந்து மீண்டு எழக்கூடிய cyclone resilient society ஆக உருவாக முடியும் எனக் கூறுகின்றனர்.

காலநிலை தாக்கம் எல்லாம் இன்னும் வெறும் சர்வதேச கருத்தரங்களுக்கான விவாதப் பொருள் என்று நாம் நினைத்துக் கொண்டு பூமியை துட்சமாக நினைத்து தொழில் புரட்சி, வளர்ச்சி என்று எவ்வித கட்டுப்பாட்டுக்குள்ளும் வர மறுத்து கரியமல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிக் கொண்டிருப்பதனால் தான் cyclone resilient society என்ற புதிய அடையாளத்தின் கீழ் நாம் திரள வேண்டி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE