புதுச்சேரி கடல் மீண்டும் செம்மண் நிறத்துக்கு மாறியது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி பகுதியில் மீண்டும் கடல்செம்மண் நிறத்துக்கு மாறியது. பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, அதன் அழகை ரசித்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை மணலில் கால் பதித்து, கடல் அலையோடு விளையாடுவதை விரும்புகின்றனர்.

இதனிடையே கடந்த மாதம் 17-ம் தேதி, இப்பகுதியில் வழக்கமான நிறத்தில் இருந்து கடல் நீரானது நிறம் மாறி, செம்மண் நிறத்தில் காட்சியளித்தது. குறிப்பாக குருசுக்குப்பம் கடற்கரையில் கழிவுநீர் கலக்கும் பகுதி தொடங்கி காந்தி சிலை பின்புறம் வரை கடல் நீரானது நிறம் மாறி இருந்தது.

கடல் நீரின் நிறம் மாறியது குறித்து தகவல் அறிந்த புதுச்சேரி அரசு அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசுக் கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து கடல்நீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ‘ஆல்கல் புளூம்’ எனும் சிவப்பு கடற்பாசிகள் நச்சுகளை உமிழ்வதால் இது போன்ற செம்மண் நிறத்தில் கடல் நீர் மாறியதாக அதிகாரிகள் தரப்பில் அப்போது தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏற்கெனவே கடல்நீர் செம்மண் நிறத்தில் மாறியிருந்த அதே பகுதியில் மீண்டும் நேற்றும் கடல் நீரின் நிறம் மாறியது. செம்மண் நிறத்தில் மாறிய கடலை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மீனவர்களின் விளக்கம்: இது குறித்து இப்பகுதி மீனவர்கள் கூறுகையில், “கடல் செம்மண் நிறத்தில் காட்சியளிக்க காரணம் அருகில் உள்ள பொம்மையார்பாளையம் பகுதியில் செம்மண் ஓடை உள்ளது. மழை பெய்தாலே செம்மண் கரைந்து எப்போதும் கடலில் வந்து கலக்கும். கடலில் நீரோட்டம் மாறி மாறி வரும். அதிகபட்சமாக தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நீரோட்டம் இருக்கும். அந்த நீரோட்டத்தின் போது வேறு இடத்துக்கு நீர் செல்வதால் நமக்குத் தெரிவதில்லை.

ஆனால், தற்போது நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்கு பக்கம் நோக்கி இருப்பதால் புதுச்சேரியில் கடல் செம்மண் நிறத்தில் உள்ள தோற்றம் நமக்குத் தெரிகிறது. எப்போதேனும் மழைக்காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறும். இந்த தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இருக்காது. வேறு எந்த ரசாயன நீரும் கலக்கவில்லை. மீன்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. பொதுமக்களுக்கும் ஆபத்தும் கிடையாது” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE