முதுமலையில் பாகனின் கட்டுப்பாட்டை மீறி பணியாளர்கள் சென்ற ஜீப்பை தள்ளிய யானை

By செய்திப்பிரிவு

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மன்றாடியார் வனப்பகுதியில் சாலையோர புதர்களை அகற்றும் பணியில் பெண் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

தெப்பக்காட்டில் வசிக்கும் பழங்குடியின மக்களான இவர்களை, வனத்துறை வாகனங்களில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பணி முடிந்ததும் மாலையில் திரும்ப அழைத்து வருவது வாடிக்கை. இதேபோல, நேற்று மாலை சுமார் ஐந்து மணியளவில் பணியாளர்கள் சிலர் பணி முடித்து மன்றாடியார் வனப்பகுதி வழியாக வனத்துறை வாகனத்தில் வந்துள்ளனர்.

அப்போது, அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு யானை சுஜய், பாகனின் கட்டுப்பாட்டை மீறி பணியாளர்கள் வந்த வனத்துறை வாகனத்தை விரட்டியுள்ளது. வனப்பகுதி சாலை என்பதால் வாகனம் மெதுவாகவே வந்துள்ளது. அருகில் வந்த யானை திடீரென வாகனத்தை தள்ளிவிட்டது. வாகனத்தில் வந்த பணியாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து, யானையை பாகன் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

தகவல் அறிந்து வனத்துறையினர் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மசினகுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வாகனம் கவிழ்ந்ததில் உள்காயம் ஏற்பட்ட கேத்தி, புட் மாதி, கிரி மேரி ஆகியோர் கூடலூர் அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE