தெப்பக்காடு முகாமில் ‘மக்னா’ யானை மூர்த்தி உயிரிழப்பு

By ஆர்.டி.சிவசங்கர்


முதுமலை: தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை), வயது முதிர்வால் உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில், தற்போது 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் மக்னா யானை மூர்த்தியும் ஒன்று. இந்த யானை, 1998-ம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை தனது 58 வயதை பூர்த்தி செய்ததன் அடிப்படையில், அதற்கு கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆட்கொல்லி யானையாக, கேரளாவில் 1998-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது. அங்கு சுமார் 23 பேரை கொன்றது. இதையடுத்து, யானையை சுட்டு பிடிப்பதற்கு கேரளா முதன்மை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த யானை அன்றைய தினத்தில் தமிழ்நாடு பகுதி, கூடலூர் வனக்கோட்டத்துக்குள் நுழைந்து இரண்டுபேரை கொன்றது.

இதையடுத்து, 1998- ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதற்கு காயங்கள் இருந்ததால் யானை மருத்துவர் என்றழைக்கப்பட்ட டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, முதுமலைக்கு வந்து ஆய்வு செய்து, அனைத்து காயங்களுக்கும் முறையாக மருத்துவம் செய்து யானையை குணப்படுத்தினார்.

அவர் அந்த யானையை குணப்படுத்தியதன் அடிப்படையில், அந்த யானைக்கு மூர்த்தி என்றும் பெயரிடப்பட்டது. மூர்க்கத்தனமாக இருந்த அந்த யானை, முதுமலை முகாமுக்கு வந்து பழக்கப்படுத்திய பின்பு சாதுவாக மாறியது. உடல் நலக்குறைவு: உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தது.

உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு படுத்துவிட்டது. கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றிநேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு வளர்ப்பு யானை மூர்த்தி உயிரிழந்தது. நேற்று உடற்கூராய்வு நடத்தப்பட்ட பின், அதன் உடல் புதைக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும்போது, "மூர்த்தி மாதிரி ஒரு சாதுவான யானையை, இந்த முகாம் பார்த்து இருந்திருக்காது. அந்த அளவுக்கு பல வகையான பணிகளுக்கு ஒத்துழைத்தது. வயது முதிர்வால் ஓராண்டாக அந்த யானையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. முதுமலை கால்நடை மருத்துவர் அசோகன் சிகிச்சை அளித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு மூர்த்தி யானை இறந்துவிட்டது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE