குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளை விரட்டிய யானை

By செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் புகைப்படங்கள் எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை ஒற்றை யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலவும் கால நிலைக்கேற்ப பலா பழங்கள் அதிகமாக காய்த்துள்ளன. இதனை ருசிக்க சமவெளி பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள், குன்னூர் பகுதிக்கு படையெடுத்துள்ளன. அவ்வப்போது, தண்ணீர் மற்றும் பலா மரங்களை தேடி யானைகள் சாலையை கடக்கின்றன.

அவ்வாறு கடக்கும் போது வாகனங்களை நிறுத்தி யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்க, வனத்துறையினர் வழிவகை செய்து வருகின்றனர். இருப்பினும், யானையை கண்டதும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புகைப்படங்கள் எடுக்க அதன் அருகே செல்கின்றனர். இந்நிலையில், குன்னூர் மலைப் பாதை கே.என்.ஆர் பகுதி அருகே ஒற்றை யானை சாலையை கடந்து சென்றது.

அப்போது, ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை ஆக்ரோஷமாக யானை விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE