கோவை: வாயில் காயத்துடன் சுற்றிவரும் ‘பாகுபலி’ யானை உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் வனப்பகுதியில் வாயில் காயத்துடன் திரியும் பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், யானையின் உடல்நிலை குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் நேற்று கூறும்போது, “ஹூலிக்கல் துர்கம் வனப்பகுதி, அதனை ஒட்டிய பட்டா நிலங்களில் யானை தென்பட்டது. அந்தப்பகுதியில் யானை உணவு எடுத்துக்கொள்வதை வனப் பணியாளர்கள் கண்டுள்ளனர். யானையின் சாணமும் தென்பட்டுள்ளது. இது யானை தொடர்ந்து உணவு உட்கொள்வதை குறிக்கிறது.
கடந்த காலங்களில் எந்த அளவுக்கு வேகமாக நகர்ந்து சென்றதோ, அதே வேகத்தில் தான் தற்போதும் யானை நடந்து சென்று வருகிறது. யானையின் உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. யானையை மிக அருகில் கண்டபிறகு, அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கலாமா அல்லது அந்த திட்டத்தை கைவிடலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்”என்றார்.
» பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தீவிரம்
» குன்னூரில் பாறை மீது ஓய்வெடுத்த சிறுத்தை: தேயிலை தொழிலாளர்கள் அச்சம்