பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் பெரிய உருவமுடைய ஒற்றை ஆண் யானையின் நடமாட்டம் உள்ளது.

இந்த யானை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, ஊருக்குள் நுழைவதும், விவசாயப் பயிர்களை உண்பதுமாக இருந்து வருகிறது. சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் வாயில் காயத்துடன் இந்த யானை செல்வதை வனப்பணியாளர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிய அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில், நெல்லித்துறை மலையடிவாரத்தில் யானை இருப்பதை நேற்று வனத்துறையினர் கண்டறிந்தனர். நெல்லித்துறை வனஎல்லையில் வனத்துறையினர் முகாமிட்டு பல்வேறு குழுக்களாக பிரிந்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

தொடர்ந்து வனத்துறையினருடன், கால்நடை மருத்துவர்கள் குழுவினர், மயக்க ஊசி செலுத்த ஏதுவாக இரு துப்பாக்கிகளுடன் நெல்லித்துறை வனப்பகுதிக்குள் நுழைந்தனர். யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். ஆனால், யானை தொடர்ந்து நகர்ந்து சென்றதால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை.

மேலும், இருள் சூழ்ந்ததால் வன எல்லையை விட்டு மருத்துவக் குழுவினர் வெளியே வந்தனர். பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறையினர், இன்று அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE