கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் பெரிய உருவமுடைய ஒற்றை ஆண் யானையின் நடமாட்டம் உள்ளது.
இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை உண்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் வாயில் காயத்துடன் இந்த யானை செல்வதை வனப் பணியாளர்கள் நேற்று கவனித்துள்ளனர். இதையடுத்து, யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வனத்துறையினர் கூறும்போது, “யானையின் வாயில் ஏற்பட்ட காயத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். முதற்கட்ட ஆய்வில், இரு யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். யானையின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும்” என்றனர்.