கருணை என்ற பெயரில் குரங்குகளின் வாழ்க்கை முறையை மாற்றுகிறோமா?

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: அண்மையில் திண்டிவனத்தில் இருந்து, திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் பயணித்த போது, பேருந்தின் ஓட்டுநர் சாலையோர வியாபாரிகளிடம் கொய்யா பழங்கள், மக்கா சோளக் கதிர்களை வாங்கி, வண்டியின் ‘பேனட்’ மேல் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.

செஞ்சியைக் கடந்து காப்புக் காட்டுப் பகுதிக்குள் பேருந்து சென்ற போது, குறிப்பிட்ட வளைவில் குரங்குகள் கூட்டமாய் சாலையோரம் காத்திருந்தன. அவைகளைக் கண்டதும், ஓட்டுநர் தான் வைத்திருந்த கொய்யா பழங்கள் மற்றும் சோளக் கதிர்களை வீசினார். பாய்ந்து கவ்வி பிடித்த குரங்குகள், அவற்றை சாப்பிட்டு விட்டு, அடுத்தடுத்து வந்த வாகனங்களை எதிர் நோக்கின.

இது பற்றி வனத்துறை அலுவலர்களிடம் பேசினோம். “விலங்குகளின் உலகமே சுவாரஸ்ய மானது. அதிலும் குரங்குகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். சேட்டையும், குசும்பும் நிறைந்த குரங்குகளை பார்த்தாலே நமக்கு ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எந்தவொரு குரங்கும் சோம்பலாக இருந்து நாம் பார்க்க முடியாது. எப்போதும் சுறுசுறுப்பாக, சக குரங்குகளை சீண்டியபடி இருக்கும். அதுதான் குரங்குகளின் சிறப்பம்சமே.

குரங்குகளுக்கு மற்றொரு பக்கமும் உண்டு. அதுதான் அவற்றின் மூர்க்க குணம். குரங்குகளை வம்புக்கு இழுத்தால் மட்டுமே அதன் மூர்க்க குணம் வெளிப்படும். அந்த சமயத்தில், எதிரில் இருப்பது எப்படிப்பட்ட உயிரினம், அதனுடன் மோதலாமா வேண்டாமா என்பதை எல்லாம் குரங்குகள் யோசிக்காது. தன் உயிரே போனாலும் பரவாயில்லை என எதிரியுடன் சண்டையிட்டு, அதை ஒருவழி செய்து விடும்.

அதேபோல, குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை என்பதால், தங்களுக்கென ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொள்ளும். அந்த எல்லையைத் தாண்டி மற்ற குரங்குகளோ அல்லது விலங்குகளோ வந்து விட்டால் அவ்வளவுதான். தன் எல்லையை விட்டு அந்த விலங்குகளை விரட்டும் வரை குரங்குகள் ஓயாது.

குரங்குகளை அதன் போக்கில் வாழவிட வேண்டும் என்றால் அவைகளுக்கு நாம் எதுவும் கொடுக்கக் கூடாது. இப்படிகொடுப்பதால்தான் அவைகள் காடுகளுக்குள் இல்லாமல் நம்முடன் வாழ தொடங்கி, நம் வாழ்விடங்களில் தொந்தரவுகளை கொடுக்க தொடங்கியுள்ளது. அப்படிப்பட்ட குரங்குகளை நாம் ‘கருணை’ என்ற பெயரில் சோம்பேறியாக்கி பிச்சை எடுக்க வைத்து விட்டோம்” என்று மிக அழகாக வனத்துறையினர் அதன் உயிரியல் சூழலை நமக்கு விளக்கினர்.

அறியாமையில் இப்படி குரங்குகளுக்கு கொடுப்பதை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகளை குறிப்பிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வைக்கலாம்; பேருந்து ஓட்டுநர்களை அழைத்து கூட்டம் நடத்தி, சமூக வெளி காடுகளை கடந்து செல்லும் போது, என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும் என்று சொல்லித் தரலாம்.

அவ்வாறு செய்யாதபட்சத்தில், இம்மாதிரியான விலங்குகளின் நலன் சார்ந்த உயரிய உயிரியல் கருத்துகள் நன்கு விவரம் அறிந்த வனத் துறையினரிடம் மட்டுமே இருந்து கொண்டிருக்கும். அவை நடைமுறைக்கு வராது. சேட்டையும், குசும்பும் நிறைந்த குரங்குகளை பார்த்தாலே நமக்கு ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எந்தவொரு குரங்கும் சோம்பலாக இருந்து நாம் பார்க்க முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE