வெள்ளியங்கிரி மலையில் 1500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய ஈஷா தன்னார்வலர்கள்

By செய்திப்பிரிவு

கோவை: தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில், வனத்துறையுடன் இணைந்து, வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதமாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் சுமார் 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

இதில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். அடிவாரத்தில் தொடங்கி 4-வது மலை வரை இருந்த குப்பை சேகரிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈஷா தன்னார்வலர் மனோகர் கூறும்போது, ‘‘நான் ஒவ்வொரு வருடமும் மாலை அணிந்து, சிவனை தரிசிப்பதற்காக இம்மலைக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். இந்த தூய்மைப் பணியில் கடந்த 6 வருடங்களாக பங்கேற்று வருகிறேன். அடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த மலையை தூய்மையாக வழங்குவது எங்களுடைய பொறுப்பு என்பதை உணர்ந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். இது எனக்கு மகிழ்ச்சியையும், மன திருப்தியையும் அளிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE