காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், டென்சி ஷெர்பா 1999 என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவரெஸ்ட் மலையேற்ற சாகச பயண வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில், எவரெஸ்ட் சிகரம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதை அம்பலப்படுத்தி உள்ளார். வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இங்கு மலையேற்ற குழுவினர் கூடாரங்கள் அமைத்து தங்கி சென்று உள்ளனர். இதுபோன்ற மோசமான முகாமை நான் பார்க்கவில்லை. ஏராளமான கூடாரங்களை விட்டுச் சென்றுள்ளனர். காலியான ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிதறிக் கிடக்கின்றன. கோப்பைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் என குப்பைக்கிடங்காக காட்சியளிக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்கள் குப்பைகளை வீசி செல்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
எவரெஸ்டில் குப்பைகளை வீசி செல்வோர் மீது நேபாள அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டென்சி ஷெர்பாவின் இந்த வீடியோவை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் (வனம், சுற்றுச்சூழல் துறை) சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்து வேதனை தெரிவித்திருந்தார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் லூக் போய்ஸ்நார்ட் தலைமையில் 10 மலையேற்ற வீரர்கள் அண்மையில் எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே 12 மைல் தொலைவில் உள்ள பகுதிகளில் 3.7 டன் குப்பைகளை அகற்றினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “எவரெஸ்ட் பகுதிகளில் குவியும் குப்பைகளில் 45 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். இமயமலையில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்’’ என்றார்.
நேபாள அதிகாரிகள் கூறும்போது, “எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஒரு நபருக்கு ரூ.5,28,000 கட்டணம் (இந்திய மதிப்பில் ரூ.3,29,993) வசூலிக்கப்படுகிறது. மலையேறும் வீரர் பயன்படுத்தும் பொருட்களில் 8 கிலோ கழிவுகளை கீழே கொண்டு வந்தால் கட்டணத்தை திருப்பி அளிக்கிறோம். இதன்மூலம் இமயமலையில் குப்பைகள் குவிவதை தடுக்க முயற்சி செய்து வருகிறோம். நேபாள அரசு சார்பில் எவரெஸ்ட் சிகர பகுதிகளில் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.
இந்திய மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரி பால் கூறும்போது, “எவரெஸ்ட் பகுதி சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எவரெஸ்ட் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஓராண்டில் 600க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. முறையான பயிற்சி இல்லாத மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் பகுதிகளில் குப்பைகளை குவித்து வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்று தெரிவித்தார்.