மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: சீதாராம் யெச்சூரியுடன் பேச ராகுல் காந்தி முடிவு

மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் பொதுச் செயலருமான சீதாராம் யெச்சூரியுடன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

மேலும் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசமுள்ள ராஜ்கஞ்ச், முர்ஷிதாபாத் மக்களவை தொகுதிகளை காங்கிரஸ் கட்சிகேட்பதால் தொகுதிப் பங்கீட்டில்இழுபறி நீடிப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த 2 தொகுதிகளுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தவை. 2014-ம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வி கண்டது. எனவே மீண்டும் அந்த 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்கிறது.

இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா, மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா ஆகியோர், ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதீப் பட்டாச்சார்யா பேசும்போது, “ தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துவிட்டோம். அவர் விரைவில் சீதாராம் யெச்சூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரச்சினைகள் முடிவுக்கு வரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE