மதவாதத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் போட்டி: திக தலைவர் வீரமணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மதவாதத்துக்கும் மதச்சார்பின்மைக்குமான போட்டியாக இத்தேர்தல் அமைந்துள்ளது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில், அனைவருக்கும் பொது சிவில் சட்டம், அரசியல் சாசனத்தில் காஷ்மீருக்கு தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ராமர் சேது பாலம் இந்துக்களின் நம்பிக்கை எனவும் பசு பாதுகாப்புக்கு தனி சட்டம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இந்திய மக்களை இந்துக்கள், சிறுபான்மையினர் என கூறுபோடுகின்ற ஆபத்தான செயல் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை தகர்க்கும் போக்கு.

அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் மக்களிடையே பகைமை உணர்வை தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஆராய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

இதுவரையிலும் மறைமுகமாக சொல்லி வந்ததையெல்லாம் தேர்தல் அறிக்கையில் நேரடியாக சொல்கிறார்கள்.

நடைபெறுகிற தேர்தல் இந்துத்வா என்ற மதவாதத்துக்கும் மதச்சார் பின்மைக்குமான போட்டி.

இதை கட்சிகளும், மக்களும் உணர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE