மோடியின் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாகிவிட்டனர்: சி.மகேந்திரன்

தேர்தல் முடிவுகளைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரிடம் கேட்டோம். “மக்களுக்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு மோடிக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு போதவில்லை. ஆனால், அது அவர்களின் தவறு அல்ல. அவர்களுக்கு கிடைத்த அனுபவம் என்பது உண்மையானது அல்ல. அது மோடியின் கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட போலித் திரையாகும். மோடியின் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாகிவிட்டனர்.

அனைத்து அதிகாரங்களும் நரேந்திர மோடியின் கைகளுக்குச் சென்றதின் பின்னணியில் கார்ப்பரேட் ஊடகங்களின் பங்கு நிறையவே இருக்கிறது. மோடியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம், மக்களுக்கான அதிகாரம் அல்ல. அது இந்திய இறையாண்மைக்கும் உகந்தது கிடையாது. பன்னாட்டு நிறுவனங்களின் நலன் மற்றும் அவற்றின் வளர்ச்சிகளை விரிவுபடுத்துதல், மக்கள் உழைப்பை, வாழ்வாதாரங்களை சுரண்டுதல், நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தல் இவற்றுக்கே இந்த தேர்தல் முடிவுகள் வழிவகுக்கும்.

ஒருபக்கம் இந்துத்துவா மறுபக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இப்படியான மோசமான சூழலை மோடி கொண்டுவருவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் அரசியல், பொருளாதார வளர்ச்சிகளுக்காகப் போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE