சங்கு.. ஊ... ஊ... சமாளித்த ஈவிகேஎஸ்!

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சியில் போட்டியிடும் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டமானுக்கு ஆதரவாக வாக்கு திரட்ட காந்தி மார்க்கெட் பகுதியில் புதன்கிழமை பிரச்சாரம் செய்தார்.

பிரச்சார வண்டியில் வளைந்து, நெளிந்து ஒருவித தடுமாற்றத்துடன்தான் ஏறினார். மைக்கைப் பிடித்து பேசத் தொடங்கிய நேரத்தில், "ஊ... ஊ..."என்று சத்தமிட்டது மாநகராட்சி சங்கு. அது 'பேசி' முடிக்கும் வரை காத்திருந்த இளங்கோவன், "பேசுற நேரத்துல சங்கு ஊதுதேன்னு யாரும் தப்பா நினைக்கக் கூடாது. இந்த சங்குகூட நம்ம வேட்பாளர் சாருபாலா மேயராக இருந்தப்போ அமைச்சது. அதான் 'டாண்'னு 8 மணிக்கு அடிக்குது"என்று சொல்லி சமாளித்தார். வெட்கத்தில் சிரித்தார் வேட்பாளர் சாருபாலா.

பிறகு, பேசிய இளங்கோவன் விருட்டென்று மைக்கில் இருந்து கையை எடுத்தார். "ஷாக் அடிக்குது.. பாருங்க"என்று சொல்லி அருகே இருந்தவரிடம் கொடுத்தார். கட்சித் துண்டை அவர் இன்சுலேஷன் டேப் போல சுற்றி மீண்டும் இளங்கோவனிடம் கொடுக்க, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

"வியப்பா இருக்கு. கரன்ட் இருக்கு போல. அதான் ஷாக் அடிக்குது"என்று இன்னொரு பஞ்ச் கொடுத்தார். "இவ்ளோ கூட்டத்தைப் பார்த்ததே மகிழ்ச்சி" என்று கூறி விடைபெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE