சென்னை: நீட் தேர்வு முடிவு வந்தவுடன் உடனடியாக மத்திய அரசு 15% கவுன்சிலிங்கை உடனடியாக முடித்து அந்தந்த மாநில அரசுகள் விரைந்து கவுன்சிலிங் நடத்திட வேண்டும், என மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை பல் மருத்துவம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் இடப் பங்கீடு குறித்த கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "தமிழ்நாட்டில் முதுநிலைப் பட்டப் படிப்புகள் படிப்பதற்கு 18 சுயநிதிக் கல்லூரிகள் முதுநிலை பல் மருத்துவம் படிப்பதற்கு 16 சுயநிதிக் கல்லூரிகள் இளநிலை மருத்துவம் படிப்பதற்கு 19 சுயநிதி கல்லூரிகள் மற்றும் இளநிலை பல் மருத்துவம் படிப்பதற்கு 20 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 சிறுபான்மையினர் கல்லூரிகளாகும். அந்த வகையில் 2022-23-ஆம் கல்வியாண்டில் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட இடப் பங்கீடு என்பது முதுநிலை பட்டப் படிப்பு அரசு ஒதுக்கீடு 407இடங்கள், தனியார் ஒதுக்கீடு 385 இடங்கள், முதுநிலை பல் மருத்துவப் பட்டப்படிப்பு அரசு 139 இடங்கள், தனியார் 157 இடங்கள் உள்ளன.
அதேபோல் இளநிலை மருத்துவ பட்டப் படிப்பிற்கு அரசுக்கு 1739 இடங்கள், தனியார் கல்லூரிகளுக்கு 1311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளநிலை பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு அரசுக்கு 1410 இடங்கள், தனியார் கல்லூரிகளுக்கு 540 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தாண்டு இடப் பங்கீடும் தொடரும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
» “வேண்டாம்... விட்டுவிடுங்கள்...” - ஜி7 தலைவர்களுக்கு ஹிரோஷிமா சர்வைவர்கள் எச்சரிக்கை
» சென்னையில் நடந்த ஐபிஎல் ஆன்லைன் டிக்கெட் விற்பனை விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு
சுயநிதிக் கல்லூரிகளில் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் உடனடியாக நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் கவுன்சிலிங் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுவாக ஒன்றிய அரசின் பங்கீடான 15% இடஒதுக்கீடு அவர்களுக்கு முடிவுற்றதற்கு பிறகுதான் மாநில அரசுகள் கவுன்சிலிங் நடத்த இயலும். அதில் ஒன்றிய அரசின் சார்பில் கடந்த ஆண்டு காலதாமதம் ஏற்பட்டது. இந்தாண்டு அது நடைபெறாது என்று கருதுகிறோம்.
ஏற்கெனவே சொன்னதுபோல் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலைப் பெற்று, நானும் துறையின் செயலாரும் மிக விரைவில் ஜீன் முதல் வாரத்தில் ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும், ஆயுஷ் அமைச்சரையும் சந்தித்து தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளின் தேவைகள் குறித்து பேச உள்ளோம். நீட் தேர்வு முடிவு வந்தவுடன் உடனடியாக ஒன்றிய அரசு 15 % கவுன்சிலிங்கை உடனடியாக முடித்து அந்தந்த மாநில அரசுகள் விரைந்து கவுன்சிலிங் நடத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை அளிக்கவிருக்கிறோம்.
அந்த வகையில் ஜீன் முதல் வாரத்தில் நீட் தேர்வு முடிவு வந்தவுடன் ஒன்றிய அரசு விரைந்து காலதாமதம் இல்லாமல் கலந்தாய்வு நடத்தும் என்று சொல்லியிருக்கிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற இந்த இடஒதுக்கீடு தொடர்பான கூட்டம் சுமுகமாக முடிவுற்றுள்ளது" என்று அவர் கூறினார்.