துணைத் தேர்வு முறை | கேந்திரிய வித்யாலயா மேல்முறையீடு: மாணவர்கள் தரப்பு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கேந்திரிய வித்யாலயா சங்கதன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மாணவர்கள் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் தேர்வு நடத்தக் கோரி, மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் சார்ந்தது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே உயர் நீதிமன்ற உத்தரவின்வின்படி குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு மட்டும் 2018-ம் அண்டு துணைத் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்குத் துணைத் தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளது. இது தொடர்பாக தனி நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காமல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மாணவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE