சிவகங்கை நரிக்குறவர் குடியிருப்பில் முதன்முதலாக பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவர் சாதி சான்றிதழுக்காக அலைக்கழிப்பு

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை நரிக்குறவர் குடியிருப்பில் முதன்முதலாக பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவர், சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் முதன்முதலாக ஜெயபாண்டி மகன் தங்கப்பாண்டி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று 438 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரை ஆட்சியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் சாதியை பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றி சமீபத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. தங்கப்பாண்டி அரசு கலை கல்லூரியில் சேர்வதற்காக மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் தனது சாதி சான்றை, பழங்குடியினர் பிரிவுக்கு மாற்ற விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஒரு வாரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் சான்று வழங்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.

இதுகுறித்து தங்கப்பாண்டியின் தந்தை ஜெயபாண்டி கூறியதாவது: சாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்து ஒரு வாரமாகியும் வருவாய்த்துறையினர் தர மறுக்கின்றனர்.

இதனால் தினமும் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம் என அலைந்து வருகிறேன். கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து வருவாய்த்துறை யினரிடம் கேட்டபோது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE