சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் மொத்தம் உள்ள 600 மதிப்பெண்ணுக்கு 500-க்கும் மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, 591-600 வரை 749 பேரும், 581-590 வரை 3,514 பேரும், 571-580 வரை 6,046 பேரும், 551-570 வரை 18,109 பேரும், 501-550 வரை 80,802 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல், வணிகவியல் பிரிவுகள்: பாடப்பிரிவு வாரியாக, அறிவியல் பிரிவில் 96.32 சதவீதமும், வணிகவியல் பிரிவில் 91.63 சதவீதமும் தேர்ச்சி உள்ளது.
கலை, தொழிற்பிரிவு மாணவர்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளனர். கலைப் பிரிவு தேர்ச்சி விகிதம் 81.89 சதவீதம்தான் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3.2% குறைவு. அதேபோல, தொழிற்பிரிவு மாணவர்களும் 82.11 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். முந்தைய தேர்வில் தொழிற்பிரிவில் 84.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
கணித பாடத்தில் 98.88% பேர் தேர்ச்சி: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணித பாடத்தில் 98.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் வருமாறு: இயற்பியல் - 97.76 %, வேதியியல் - 98.31 %, உயிரியல் - 98.47 %, கணிதம் - 98.88 %, தாவரவியல் - 98.04 %, விலங்கியல் - 97.77 %, கணினி அறிவியல் - 99.29 %, வணிகவியல் - 96.41 %, கணக்குப்பதிவியல் - 96.06 %
» பிளஸ் 2 உடனடி துணை தேர்வு ஜூன் 19-ல் தொடங்கும்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
அரியர் முடிவுகள் வெளியீடு: கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெறாத பாடங்களை, பிளஸ் 2 தேர்வுடன் சேர்த்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான அரியர் பாடங்களின் தேர்வு முடிவுகளையும் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதை dge1.tn.gov.in எனும் தளத்தில் அறியலாம்.
உயர்கல்வி ஆலோசனை: பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்ததைவிட மதிப்பெண் குறைந்தது, வெற்றி வாய்ப்பை தவறவிட்டது போன்ற காரணங்களால் மாணவர்கள் சுணக்கம் அடைந்துவிடாமல் தடுக்க, அரசின் இலவச உதவி மையம் செயல்படுகிறது. மாணவர்கள், பெற்றோர் ‘104’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை பள்ளிக்கல்வியின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.