சரியான தேர்வு மையத்துக்கு உரிய நேரத்தில் மாணவியை அழைத்துச் சென்ற ஆவடி காவலர்களுக்கு குவியும் பாராட்டு!

By செய்திப்பிரிவு

ஆவடி: நீட் தேர்வு எழுத தவறான தேர்வு மையத்துக்குச் சென்ற மாணவியை, போக்குவரத்து ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்று சரியான தேர்வு மையத்தில் உரிய நேரத்தில் சேர்த்த ஆவடி போக்குவரத்து காவலர்கள் தனசேகரன் மற்றும் தினேஷ் குமார் சாமி ஆகியோருக்கு மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் வெளியிட்ட தகவல்: ஞாயிறன்று (மே 7) நடந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் தேர்வு எழுத வந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த விநாயகம் என்பவரது மகள் ஆனந்தி என்ற மாணவி வழி தவறி ஜெயகோபால் கரோடியா பள்ளி, ஆவடி என்ற தேர்வு மையம் சென்றதால் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்று அழுதபடி நின்று கொண்டிருந்த மாணவி ஆனந்தி மற்றும் அவரின் பெற்றோர்கள் இருவரையும் அங்கு பணியில் இருந்த ஆவடி போக்குவரத்து காவலர்கள் தனசேகரன் (HC-12628) மற்றும் தினேஷ் குமார் சாமி (Gr1-12876) இருவரும் மாணவி ஆனந்தி மற்றும் அவரின் பெற்றோர்கள் இருவரையும் Avadi Traffic Patrol வாகனத்தில் ஏற்றி சென்று விவேகானந்தா வித்யாலயா பள்ளி, திருமுல்லைவாயில் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு அழைத்து சென்று மாணவி தேர்வு எழுதுவதற்கு உதவி செய்தனர்.

நீட் தேர்வெழுத சென்ற மாணவிக்கு உதவிய போக்குவரத்து காவலர்கள் தனசேகரன், தினேஷ்குமார் சாமி

மாணவி மற்றும் அவரின் பெற்றோர்கள் போக்குவரத்து காவலர்களின் தக்க சமயத்தில் செய்த உதவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவியும் பாராட்டு: இந்நிலையில், மாணவிக்கு போக்குவரத்து காவலர்கள் உதவும் வீடியோவை ஆவடி காவல் ஆணையகரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மாணவி சரியான தேர்வு மையத்தில் உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவலர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE