சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இன்று (மே 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்தி:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும்தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் (அரசு ஒதுக்கீடு இடங்கள்) முதலாமாண்டு சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வசதியில்லாதவர்கள் தங்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி பிரிவினர் ரூ.500-ம்,எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். இணைய வசதியற்றவர்கள் வரைவோலை மூலமாக பதிவுக் கட்டணத்தை செலுத்தலாம்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை தேர்வு செய்துவிட வேண்டும். அதேநேரம் விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் மட்டும் நேரடியாக நடைபெறும்.
இதுசார்ந்து சந்தேகம் இருப்பின் 044-2235 1014/1015 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது tneacare@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கலை, அறிவியல் படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பப் பதிவில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.