சென்னை: தமிழகத்தில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டு (2022-23) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த ஜூன் 13-ம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நடப்பாண்டு அனைத்துவித பள்ளிகளுக்குமான வேலைநாள் இன்றுடன் (ஏப்ரல் 28) நிறைவு பெறுகிறது. இறுதிநாளில் எஞ்சியுள்ள தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 29) கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.
அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்,வேலை நாட்கள் உட்பட விவரங்கள் அடங்கிய வருடாந்திர காலஅட்டவணை மே 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.