‘நம்ம ஊர் பள்ளி’ திட்டத்துக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் ரூ.43 லட்சம் நிதி

By செய்திப்பிரிவு

சென்னை: “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்துக்காக தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 லட்சத்து 735 ரூபாய்க்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (18.4.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (டெக்ஸ்கோ) 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 இலட்சத்து 735 ரூபாய்க்கான காசோலையை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு பொதுத்துறை செயலாளர் டி. ஜகந்நாதன் வழங்கினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) செயல்பட்டு வருகிறது.

இக்கழகம், முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரர்களைப் பல்வேறு ஒன்றிய / மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஏனைய வாரியங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், இளநிலை உதவியாளர்கள், தொலைபேசி இயக்குபவர்கள், சுற்றுலா காவலர்கள், செவிலிய உதவியாளர்கள், தீயணைப்பாளர்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், காப்பாளர்கள் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி மறுவேலைவாய்ப்பு வழங்கும் “மனித வள முகமையாக” செயல்பட்டு வருகிறது. தற்போது, 8,226 முன்னாள் படைவீரர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் 2021-2022ஆம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 இலட்சத்து 735 ரூபாய்க்கான காசோலை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சிறப்புச் செயலாளர் வ.கலைஅரசி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE